
உன்னுடன்
கை குலுக்கிய நாட்களில்
அந்தக்கவிதை உதிர்ந்திருக்கலாம்...
தொன்மையின் சாயலிருப்பதாக
சிலர் சிலாகித்தார்கள்
முகத்தை
மூடியபடியே என்னைச் சுவாசித்தாய்...
முதல்வரியில்
பார்வைகள் மட்டுமே பேசிக்கொண்டன...
சந்திப்(பு)பிழைகளில்
தடுமாறிக்கொண்டிருந்த காதல்...
சந்தத்தை விடாமல்
வார்த்தைகளைத் தொடர்ந்தது...
முதல் முத்தம் கண்களென்றால்
இரண்டாம் முத்தமாய்
இருவரின் விரல்கள் சிலிர்த்தன
இதழ்கள் மட்டும் அரும்பவேயில்லை!
இனித்த வார்த்தைகளை
மணமுடிக்க மறுத்த கவிதை....
தொலைக்கும்போது
நம் முகவரியைக் கலைத்திருந்தது.
- மு.முகமது பாட்சா*
13 /12 /2018
No comments:
Post a Comment