
ககனத்தைக் களவாடியவள் போல்
நீ சென்றுகொண்டிருக்கிறாய்...
களவு மந்திரத்திற்குக்
கட்டுப்பட்டவன் போல்
நான் வந்து கொண்டிருக்கிறேன்...
என் நிழலைத் திருடியவள்
நீயாகத்தான் இருக்கவேண்டும்...
பொன்னழலில் நான்
பொசுங்கிக் கொண்டல்லவா இருக்கிறேன்...
கசங்கிய காகிதங்களில்
என் கவிதைகள் மடிந்து கிடக்கின்றன
ஆனாலும் அதற்குள்தான்
உனக்கான நேசமும் ஒட்டிக் கிடக்கிறது...
ரோஜாக்களின் தோட்டத்தை
நீ மூடி மறைத்திருக்கிறாய்....
காதலின் வாசத்தை
காற்றல்லவா சுமந்து வருகிறது...
பார்ப்பவர்கள் இதனைக் காதலென்பார்கள்
நான் கசல் என்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
08 /12 /2018
No comments:
Post a Comment