
கிமு வில் எழுதப்பட்டதா அல்லது
கிபி யில் எழுதப்பட்ட லிகிதமா
எனத் தெரியவில்லை
வார்த்தைகளின் தடுமாற்றங்களில்
எழுத்துகள் வளைந்து நெளிந்திருந்தன...
காதல் லிகிதமாக இருக்கலாம்...
ஆங்காங்கே
இரகசியக்குறிப்புகள் பேசிக்கொண்டன...
விளக்கின் வாசனையிருப்பதால்
இரவில் எழுதப்பட்டிருக்கும் என்பது
ஆய்வாளர்களின் சமர்ப்பிப்பு...
இலிகதன் கடிதம் எழுதியவுடன்
இறந்திருக்கக் கூடும்! - இறுதிவரியில்
இரத்தத் துணுக்குகள் ஒட்டியிருந்தன...
அவள் என்பதை
கேள்விக் குறிக்குள் வைத்து
ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருக்க...
அவன் இப்போதும் உயிருடன் இருப்பதாக
ஓர் இரகசிய லிகிதம் வந்திருக்கிறது...
முந்தைய லிகிதத்தின்
இறுதிவரி இரத்தத் துணுக்களில்
அவளைத் தேடச்சொல்லியும்
இரகசியக் குறிப்பொன்றிருக்கிறது...
கையெழுத்துகள் ஒத்துபோவதால்
இந்த லிகிதமும்
அதே இலிகிதன்தான் எழுதியிருக்கிறான்.
- மு.முகமது பாட்சா*
13 /12 /2018
No comments:
Post a Comment