
அரசனானவன்
தன் புஜங்களை உயர்த்தி
வசனங்களை உதிர்த்தான்....
வரலாறு
தன் பக்கங்களை மூடிக்கொண்டதாக
மாயன் காட்டி புலம்பியது...
காட்சிகளை மாற்றியது காலப்பிழையென
காற்றுப் பதுங்கியது...
சிறகுகள் பறவைகளுக்குப் பாரமென
அகற்றப்பட்டது...
உதிரம் அரசுடையதாகின...
நிழல்களுக்கு வரி செலுத்துவது
தேசிய உணர்வென அலங்கரிக்கப்பட்டது
கடவுள்களை விற்றவர்கள்
கடவுள்களாக அவதரித்தார்கள்...
நீதியென்பது
தீது என்று மொழியாக்கமானது...
சூதுகளி
சூட்சமமாய் விரிய
பிணங்களே கம்பளங்களாகின...
அருகம்புல்லுரசலில்
ஆகாசவனம் பற்றியெரிய...
அகந்தை
எங்கு உட்கார்ந்திருந்ததென
ஆய்ந்து கொண்டிருந்தார்கள் அவனெலும்பை
அதிலிருந்தது
சாத்தானின் கைப்பிடி மண் மட்டுமே!
- மு.முகமது பாட்சா*
12 /12 /2018
No comments:
Post a Comment