நுண்புனை கதைகள்

நான் அணிந்திருந்த சிறகுகள் இரவலென்று சற்றுமுன்தான் தெரிந்தது.
நானிப்போது பறப்பதை நிறுத்திக் கொண்டேன்...
என்னைப் பார்ப்பவர்கள் சிரிக்கும் சிரிப்பில் ஏளனம் நிறைந்திருந்தது
கனவுகளை நான் சிறகுகளுக்குள்தான் வைத்திருந்தேன்
அவை ஒவ்வொன்றாக இப்போது உதிர்ந்து கொண்டேயிருந்தன
சிறகுகளைப் பிய்த்தெறிந்துவிட்டு
மீனாகக் கூட மாறிவிடலாமென்று கடலை நோக்கியோடினேன்...
என் கவலையை அந்தக் காகம் உணர்ந்திருக்கலாம்
என்னருகில் மெல்ல நெருங்கிவந்தது...
என் எண்ணத்தை அதனிடம் பகிர்ந்து கொண்டேன்..
நீ எனக்கு உணவாக விருப்பமா? என்று கேலியாகக் கேட்டது
ஆணவமா? என்று கோபப்பட்டேன்
பிறகென்ன, நீ மீனாக மாறினால் என்றாவது ஒரு நாள்
கருவாடாக என்னெதிரில் விழாமலாப்போவாய் என்று நகைத்தது
அப்படியென்றால் என் சிறகுகள் யாருடையது என்று கேட்டேன்
என் அப்பாவித்தனத்தை அது ரசித்திருக்கலாம்
தலைசாய்த்து என்னைப் பார்த்துவிட்டு நெகிழ்வோடு சொன்னது
முதலில் நீ பறவையேயில்லை! உனக்குச் சிறகுகளும் இல்லை...
நீயொரு மனிதன்
நீ நீயாக இருக்கவே ஆசைப்படு அதுதான் உனக்கும் நல்லது...
உன்னால் ஓட முடியும் ஆட முடியும்
பறவைகளான எங்களால் அவற்றைச் செய்ய முடியுமா?
இப்போது என்னிடம் சிறகுகளில்லை
கனவுகள் என் கால்களைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தன...
- மு.முகமது பாட்சா*
31 /12 /2018
No comments:
Post a Comment