Saturday, 12 January 2019

பெர்முடா மாளிகை

பெர்முடா மாளிகை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வீடு, செடி, மரம், வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை


சில ரகசியங்கள் 
அந்த மாளிகையில் பதுங்கியிருக்கின்றன... 
அதன் வாசலே 
முரண்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது... 
பெர்முடா முக்கோணம் போல் 
உள்ளே சென்ற உளவாளிகள் 
எலும்புகளாகக் கூடத் திரும்பிவரவில்லை... 
பறவைகளுக்கும் அதன் வானம் 
அங்கே தடை செய்யப்பட்டது... 
அரசியின் ரதம் கூட 
சப்தமெழுப்பாமல்தான் உள்ளே வரும் 
மின் காந்த நுகர்வில் 
கதவுகள் சப்தமிடாமல் வழிவிடும்... 
காவலாளி அப்போதெல்லாம் 
கண்களைக் கட்டிக் கொள்வான்... 
கால்தடுக்கித்தான் அரசி இறந்துவிட்டதாக 
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்... 
இப்போதும் மாளிகையில் அரசி 
உலாவுவதாக வதந்தி உலாவுகிறது... 
சப்தமில்லாமல் யார்யாரோ 
பேசிக்கொள்கிறார்கள்... 
திடீரென்று விளக்குகள் எரிந்து அணைகின்றன... 
ரகசியங்கள் மெதுவாக வெளியேறி 
குற்றவாளியின் கைகளில் 
செங்கோலாய் அமர்ந்து கொள்கிறது... 
இப்போது மாளிகையின் காவலன் 
இரத்தம் கக்கி இறந்து கிடக்கிறான்... 
ரதம் கவிழ்ந்துகிடக்க 
அரசி அறைந்ததால் சாரதி இறந்துவிட்டான் என 
சேனாதிபதி செய்தி வாசிக்கிறார்... 
இப்போதும் கூடப் பறவைகளுக்கு 
அதன் வானம் அங்கே தடை செய்யப்பட்டிருந்தது. 

- மு.முகமது பாட்சா* 
13 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts