
இங்கு
எதை எதையோ
நான் தேடிக் கொண்டிருக்கிறேன்...
அச்சில் ஏறியவையெல்லாம்
சந்தைக்கடையில்
வந்து விழுந்திருக்கின்றன...
ஜோல்னாப்பை ஜீவிகளின்
நுனி நாக்கு உரையாடல்களில்
சிலர் அசந்தும்
சிலர் கசந்தும் நகர்கிறார்கள்...
கர்ப்பப்பை வேதனைகளுடன்
காத்துக்கிடக்கின்றன
கணக்கில்லாத புத்தகங்கள்...
தலை கனத்த புத்தகங்களை
சிலர்
தடவிப் பார்த்து நகர்கிறார்கள் ...
விலைகளில் இடறிவிழ
பாக்கெட்டுகளில் இடமில்லை
எழுதிய விரல்களைச் சிலர்
சிலாகித்து முத்தமிடுகிறார்கள்
கர்வத்தைச் சுமந்து சிலர்
பிணமாக உலாவுகிறார்கள்
எழுதாத பக்கங்களும் அங்குதான்
புழுக்கமாய்
உலாவிக் கொண்டிருக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
03 /01 /2019
No comments:
Post a Comment