
சாம்பற்படிக்கம் நிரம்பும் வெளியில்
வெண்சுருட்டு
தன்னாயுளை இழந்து கொண்டிருக்கிறது...
மதுக்குடுவையில் வழியும்
காற்றின் உரையாடல்
என்னோடு எதனைப் பேசும்?....
பெருமையைப் போர்த்திக் கொள்ளும்
முதுமையில் ஆயுட்காலம்
தன்னை மீட்க முயற்சிக்கிறது...
பிரார்த்தனைகளின் முனையில்
ஒட்டிக்கொண்டிருப்பது
சாத்தியமில்லாத சங்கடங்கள்தான்...
துலாபாரத்தின் முனைகள்
சமமென்பதே
சத்தியமில்லாத வார்த்தை...
காற்றுக்கரைந்த பின்
காயம் நாற்றமெடுத்துவிடுகிறது...
வாசனைத் தைலங்களும்
வலுவிழந்த பிறகு
கற்பனைகளெல்லாம்
மண்ணுக்குள் புதைந்து போகின்றன...
வெண்சுருட்டு
இப்போது சாம்பற் படிக்கத்தில்.
- மு.முகமது பாட்சா*
05 /01 /2019
No comments:
Post a Comment