
கூதையை
காற்பணத்தில் அடைத்ததாக
தாத்தன் எழுதிய கவிதையைத் தேடியபோது
கிடைத்தது ஒரு கிழிந்த ஸ்வட்டர்...
மயிலிறகின் குட்டி
மனசுக்குள் உட்கார்ந்திருப்பதாக
எழுதிய வரிகளின் அருகில்
சின்னதாய் ஒரு வளையல் துண்டு....
அந்தியைப் பிடித்து
சந்தத்தில் வைத்ததாகச் சொல்லும் தாத்தன்
மஞ்சளை அவ்வரியில் பூசியிருந்தான்...
நாற்று நடும் போது
பார்வை குனிந்தது நாற்று நிமிர்ந்ததென்று
எதைச் சொல்லியிருப்பான்....
குசும்புக்காரன் உன் தாத்தனென்று
பாட்டி அடிக்கடி கதைத்திருக்கிறாள்....
படுக்கையில் தாத்தன் கடைசியாகச் சொன்னது
இந்தக் கவிதை
இத்துடன் முடிவடைகிறது என்பதுதான்.
- மு.முகமது பாட்சா*
20 /01 /2019
No comments:
Post a Comment