
காலரை உயர்த்தியவர்
கண்களால் கூட்டத்தை அளந்தார்...
எண்ணிக்கை குறைவுதான்
இருந்தாலும்
குரலொலியைக் கமறிக்கொண்டார்
கம்பனின் குகனோடு நுழைந்தவர்
ஓஷோவையும்
அருகில் வைத்துக் கொண்டார்...
கான்பூசியம் ஏன் வந்ததென்று
யாருக்கும் அங்கு விளங்கவில்லை...
தஸ்தயேவ்ஸ்கியும் காஃப்கா வையும்
பேசவில்லையென்றால்
அறிவாளியின் அக் மார்க் குறையுமென்பது
அவருக்கு நன்றாகவே தெரியும்...
அடுத்ததாய் அந்த நூலுக்கு வந்தவர்...
விரல்விட்டு
எழுதியவரைப் புகழ்ந்துவிட்டு,
நடுப்பக்கத்தின் சில வரிகளை
நட்புக்காகப் படித்துவிட்டு நகர்ந்த போது
ஏமாந்து நின்றது
அந்தப் பாவப்பட்ட எழுத்தாளனும்தான்.
- மு.முகமது பாட்சா*
19 /01 /2019
No comments:
Post a Comment