
ஆழ்மனதினுள் எழும் கேள்விகளுக்குள்
சதுரங்கக்காய்கள் நகர்கின்றன...
முரண்களின் வனத்தில்
மூங்கில் புதர் வளர்ப்பதுவும்
வானத்தை வண்ணம் அடித்துவிட்டதாய்
கற்பனை பூசுவதுமான
பிரபஞ்சப் பெரும் கனவுகளுக்குள்
ஒரு சிற்றெறும்பு எப்போதும் கடந்து போகிறது
கேள்விக்குறிகளின் கீழிருக்கும் புள்ளிகள்தான்
ஆச்சரியக்குறிகளின் கீழும் உட்கார்ந்திருக்கின்றன
முட்டைதான்
பிரபஞ்சத்தின் வடிவென்பதை யார் கணித்தார்கள்?
கரு முட்டைக்குள்தான் எத்துணை ஜென்மங்கள்
உள்ளீடுகளாக வாசம் செய்கின்றன!
இங்கு நகர்தலென்பது நாமா? பிரபஞ்சமா?
- குழப்பிக் கொள்ளாதீர்கள் -
விடையே கிடைக்காத
வினாக்களுக்கான தேடுதல் வேட்டையில்தான்
விதிகளின் விளையாட்டும் இடம் மாறிக்கொள்கிறது
குழந்தை அழும்போது
பால் கொடுப்பவள் மட்டுமே தாயாகிறாள்
பறவைகளுக்குள் இத்துணைத் தேடல்களில்லை
மூங்கில்களால்
வீடுகளைக் கட்டி புல்லாங்குழல் செய்யுங்கள்...
இல்லையென்றால் நச்சரவங்கள்
அங்குத்தானே குடியிருக்கத் தோன்றும்.
- மு.முகமது பாட்சா*
25/09/2018
No comments:
Post a Comment