Sunday, 23 September 2018

எழுதாத வார்த்தைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

எழுத்துகளை அடுக்கத் தெரியாமல் 
விழித்துக்கொண்டிருக்கிறது ஒரு கனவு 
பிழை வார்த்தைகளுக்குள் தலை 
அவ்வப்போது சிக்கிக் கொள்கிறது 
கூர்மையான வார்த்தைகளுக்கு 
கைப்பிடி மிகவும் அவசியம்... 
பற்றியெரியும் எழுத்துகளை எப்படி 
நீரிலான வார்த்தைகளில் சொருக முடியும்? 
குளிர்ந்த எழுத்துகளை 
அக்னிவார்த்தைகளுக்குள் அடக்கவும் முடியாது 
வைக்கக் கூடாத இடத்தில் வைத்த வார்த்தைகள் 
வசவுச் சொற்களில் நேசம் பூசிக் கொள்கிறது 
எழுதாத வார்த்தைகள் 
இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன என்று 
சில எழுத்துகளென்னை 
தினமும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.. 
தேன் கூட்டிலிருக்கும் வார்த்தைகளை எடுப்பது 
அத்துணைச் சுலபமில்லை 
காகத்தோடு இரையெடுத்த வார்த்தைகளை 
தண்ணீரில் கொட்டி சேகரிக்கிறேன் 
கனவு மட்டும் தூங்காமல் 
இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
24/09/2018 

No comments:

Post a Comment

Popular Posts