
விலையில்லாத அரிசியில்
கற்களைப் பொறுக்கி
காகத்திற்கு இறைக்கிறாள் மூதாட்டி
புழுக்கள் அவளிடம் பேசிக் கொண்டிருந்தன
அவளிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்
எந்த ஓட்டலில் சாப்பிடலாம் என்பது
செல்பேசிக்குள் ஓடிக் கொண்டிருந்தது
சிட்டி மாலுக்குள் அவர்கள் நுழையும் போது....
அவள் ஏற்றி வைத்த ஊதுபத்தியில்
மணமில்லை
அநாதியாக்கி விட்டக் கிழவன்
மவனுக்குத்தானே
அத்தினையையும் விற்றுச் செத்தான்....
மணியார்டருக்காக அவள் காத்துக் கிடக்கிறாள்
அதுகூட அவர்களின்
ஞாயிற்றுக்கிழமையை விடக் குறைவு....
மறக்காமல் வந்துவிட்டது காகம்
அதற்கும் அவள் அந்தச் சோற்றை வைத்தாள்...
சர்வரின் பாக்கெட்டில் டிப்ஸ் 50 ரூபாய்!
- மு.முகமது பாட்சா*
17 /09/2018
No comments:
Post a Comment