
புத்த பொம்மையொன்று தானாக
கண்திறந்து மூடுகிறது...
பிரமையொன்றை பிடித்திழுத்து
மேசையின் மீது உட்காரவைக்கிறேன்
வனையாத வெள்ளைப்புறா
ஒற்றை இறக்கையில் ஓடிவந்து விழுகிறது
போதிமரம் விற்பனைக்கென்ற பலகை
நீண்ட நாட்களாகத் தொங்குகின்றன...
எழுதாத தாளில்தான்
கவிதைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன
தூரிகையெடுத்தவன்
தரையைத் துடைப்பத்தால் சரி செய்கிறான்
காட்சிகளை அமைத்துவிட்டுக் கண் உறங்குகிறேன்
புத்த பொம்மையொன்று
என்னை எழுப்பிக் கொண்டிருக்கிறது...
நான்
இறந்துவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
24 /09 /2018
No comments:
Post a Comment