
முடியைப் பிடுங்கி ஊதுகிறான்
வாயின் நரகலோடு நால்வீதி வலம் வருகிறது
ஊதியவன் மீது குற்றமில்லையாம்
பறந்த முடிக்கு
சிறகுகளிருந்தால் வெட்டச் சொல்கிறார்கள்
ஏழையொருவன் கேள்வி கேட்கிறான்
பதிலில்லாத கேள்வியைக் கேட்டதற்காக
அவனை அடித்து உதைக்கிறார்கள்
சற்றே நிறம் மாறும் ஓணான்
செடி தன் நிறத்தைத் திருடிக் கொண்டதாக
பிராது சொல்கிறது...
சிறைச்சாலைகள் சொகுசாகிப் போனதால்
தேசம் சிறைச்சாலையாக மாறிக் கொள்கிறது
நதிகளின் மௌனத்தை
இறந்துவிட்டதாக மொழி பெயர்க்கிறார்கள்
வெப்பக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது...
அது
வயிற்றிலிருந்து புறப்பட்டதாகவும் இருக்கலாம்
பற்றியெரியும் போதுதான் அதற்கும்
பதில் கிடைக்கும்.
- மு.முகமது பாட்சா*
18 /09 /2018
No comments:
Post a Comment