
சற்று முன்தான்
புத்தன் இந்தப் பக்கம் சென்றதாகச் சொன்னார்கள்
அவர்களுக்கு இதுவே வேலையாகி விட்டது
நேற்றுகூட ஏசுவைப் பார்த்ததாக ஒருவன் சொன்னான்
அங்குப் பெரும் கூட்டம் கூடியிருந்தது
அவன் மொட்டையடித்திருந்தான்
அகிம்சையை
அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டிருந்தவன்
முழு நிர்வாணி
அடிக்கடி அழுக்கைச் சொறிந்து கொண்டான்
ஒரு பக்கம் எருக்கங்குச்சிகளை
போதிமரத்து வேரென்று விற்றுக் கொண்டிருந்தார்கள்
ஆசைகளுக்கான விண்ணப்பங்கள்
அவன் காலடியில் குவிந்து கொண்டிருந்தன
ஒரு சிலர் அல்லாவை அழைத்து வருவதைப்பற்றி
பேசிக்கொண்டிருக்க
அங்கிருந்து மெல்ல நழுவினேன்
ஒருவன் கையைப் பிடித்திழுத்தான்
அந்தப் பக்கம்தான் ஈசன் உட்கார்ந்திருக்கிறாரென்று
- மு.முகமது பாட்சா*
14 /07 /2018
No comments:
Post a Comment