
படபடக்கும் வரிகளில்
இரசாயணம் தோய்ந்த மரணமொன்று
ஒட்டிக்கொண்டிருக்கிறது...
மனதினழுத்தத்தால் சில எழுத்துகள்
நசுங்கிக் கிடக்க....
எழுத்துகளைக் கோர்க்கும் போது அலைந்த
தூவலின் அழுகை
வார்த்தைகளை வலுவிழக்கச் செய்கின்றன...
கொட்டிய தேநீரின் சித்திரம்
சருகின் சடசடப்பினை உள் வாங்கிக் கொண்டு
நீள் வட்டப் பாதையில் ஒழுகிக் கிடக்க
மன்னித்திடு
என்ற வார்த்தையினோரத்தில் சாய்ந்து
அழுது கொண்டிருக்கிறாள்
வார்த்தைகள் படபடக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
01/08/2019
No comments:
Post a Comment