
கண்களைக் கட்டி கைகளில் கொடுத்தார்கள்
இதுதான் சுதந்திரம் என்று
மூவர்ணக் கொடிகளுக்குள் முழுமையாகப் புதைந்தோம்
தேசிய கீதங்களுக்கு எழுந்து நின்றோம்
அகிம்சையை ஆடையாகத் தைத்துக் கொண்டோம்
காந்திக்குச் சிலைகள் வைத்தோம்
போராட்டங்களைப் புதைத்து வைத்தோம்
பரந்த தேசத்தில் பாடித்தான் திரிந்தோம்...
காலம் - மெல்ல எங்களை விழுங்கிக் கொண்டிருந்தது
வந்த பாதைகளை விலைக்கு விற்றோம்
வராத கனவுகளை விலை கொடுத்து வாங்கினோம்
சுதேசியத்தைத் தூக்கியெறிந்தோம்..
இயற்கையின் கனவுகள் இடிந்து விழுந்தன
நகரங்கள் எங்களை விழுங்கிக் கொண்டன...
உடைகளில்லா ஒரு நாளில் எழுந்து பார்த்தோம்
எங்களைச் சுற்றிலும் விலங்குகள் சூழ்ந்திருந்தன
வெளிச்சம் விலகி இருந்தது
இனியாவது பகலில் வாங்கச் சுதந்திரம் கிடைக்குமா?
போராட்டங்களைத் தோண்டியெடுக்கிறோம்
காந்தியின் கைத்தடி சிரித்துக் கொண்டிருக்கிறது.
- மு. முகமது பாட்சா
15/08/2019
No comments:
Post a Comment