
நீ வருவாயா?
தேடலின் மிச்சத்தை
சன்னலோரத்தில் வைத்திருக்கிறேன்....
தேயிலை வடிநீரில்
உன் பார்வைகள் வந்து இடறுகின்றன...
கோப்பை ஏனோ மிகைக்கிறது!
வர்ணிக்கத் தெரியாதவனின் முற்றத்தில்தான்
காதல் பறவைகள் கூடமைக்கின்றன...
அவ்வப்போது நான் அதில் இளைப்பாறுகிறேன்...
ரசமிழந்தக் கண்ணாடியின் அரூபம்
எங்கோ அழைத்துச் செல்ல
மந்தகாச இருட்டில்
சிறு வெளிச்சமாய் நீ வருகிறாய்...
வெட்பம் இருவருக்குள்ளும்
புதைந்து போனதால்
விரல்பிடித்த தருணம் உணர்ந்தேன்
உலகம் உறைந்து கிடந்ததை...
இலைகள் அசைகின்றன
இதமான காற்று உள் நுழைகிறது.
- மு.முகமது பாட்சா*
12 /02 /2019
No comments:
Post a Comment