
யானை
யானையாக இருக்கும் போதுதான்
அதற்கு 'கசேந்திரன்' என்று பெயரிடுகிறான்...
வனத்தைச் சுமந்து திரியும் யானை
இப்போது
முகப்பாடத்துடன் ஊர்வலம் போகிறது...
யானை யாசிக்கிறது
ஆசிர்வதிக்கிறது...
அதன் வனம் சப்தக்கூடுகளையிழந்து
நகரத்தின் வீதிகளில் நகர்ந்து செல்கின்றன...
சப்பரத்திலமர்ந்து
சாமி அருள்பாலிக்கிறார்
யானை இப்போது
ஒரு மதத்திற்குள் நுழைந்து கொண்டது....
கவளங்களாய்
சோற்றை உண்ணக் கற்றுக் கொள்கிறது...
காடு வறட்சியாகி அழிந்து போகின்றன...
தும்பிக்கையை மறந்துவிட்ட யானை
அங்குசத்திற்குள் அடங்குகிறது...
யானை காட்சிப்பொருளாகிறது...
யானைக்கு அவர்களிட்ட பெயர் மறைந்து
யானை என்றே இப்போதும் அழைக்கப் படுகிறது...
அதன் உள்ளிருக்கும் விதைக் காடு
துளிர்த்தெழுந்து...
அசுரவனமாக ஆகாயம் தொடும்போது
பாகன் மிதிபட்டு இறந்து கிடக்கிறான்...
எல்லோரும் ஓடுகிறார்கள்....
காடு மெல்ல
தன்னிடம் நோக்கி நகர்ந்து செல்கிறது.
- மு.முகமது பாட்சா*
04 /02 /2019
No comments:
Post a Comment