
நான் பறந்து கொண்டிருக்கிறேன்
எதற்கான உத்தரவுகளென்று தெரியவில்லை
வட்டமிட்டுக் காட்டும் ரேடர்
சுயேச்சையாகவே சுடுவதற்கு உத்திரவிடுகிறது
கீழே சில நூறு உயிர்கள்
நகர்ந்து கொண்டிருக்கின்றன...
சற்று நேரத்தில் புகை வானுயர்கிறது...
ஓலங்களைக் கேட்க வாய்ப்பில்லை
மனதிற்குள் சின்னக் கீறல் நகர்ந்துபோகிறது
மகள் புன்னகைத்துக் கையசைக்கிறாள்...
மனைவி தன் கண்ணீரைக்
கைக்குட்டையில் மடித்துத் தருகிறாள்..
பெருமையாகத்தான் இருக்கிறது
கீழே அமைதியாக இருக்கிறது
அமைதியென்பது எவ்வளவு ஆபத்தானது...
நான் விழுந்து கிடக்கிறேன்
என்னைச் சுற்றிலும் எதிரியின் சிப்பாய்கள்..
மகள் புன்னகைத்துக் கையசைக்கிறாள்...
மனைவி தன் கண்ணீரைக்
கைக்குட்டையில் மடித்துத் தருகிறாள்..
இது யாருக்கான யுத்தமென்று
கத்தவேண்டும் போல் இருக்கிறது...
எனக்கு அதற்கு மட்டும் அனுமதியில்லை.
- மு.முகமது பாட்சா*
27 /02 /2019
No comments:
Post a Comment