
இதனைச் சிலர்
சிறைச்சாலை என்கிறார்கள்...
நான்
நான்கு சுவர்களுக்குள் அடங்கிய
தேசம் என்று மொழிபெயர்க்கிறேன்...
எங்களுக்கும்
அவர்களுக்குமிடையில் இருக்கும் தடுப்பு
சுதந்திரத்தைப் பற்றியது...
அவர்களின் உடை
நாகரீகமாக மின்னுகின்றன...
நாங்கள்
கிழிந்த உடையிலிருக்கும் கைதிகள்...
அவர்களின் கோபம்
எங்களின் சதைகளின் மீது
திணிக்கப்படுகின்றன...
அவர்களின் காமம்
எங்களின் கழிவறையில் கழிகின்றன...
அவர்களின்
துப்பாக்கி அங்கீகரிக்கப் பட்டது
எங்களின்
சொற்கள் தடை செய்யப்பட்டது...
அவர்களின் உணவு
எங்களின் உணவுகளை வீசி எறிகின்றது...
அவர்கள்
எங்களுக்கு வைத்திருக்கும் பெயர்
காட்டுமிராண்டி
நாங்கள் அவர்களை
சார் என்றுதான் அழைக்கிறோம்...
இதனைச் சிலர்
சிறைச்சாலை என்கிறார்கள்...
இந்தக்கவிதை
அதனைப் படிமம் என்று விளக்குகிறது.
- மு.முகமது பாட்சா*
15 /02 /2019
No comments:
Post a Comment