
என் கீரிடம் மிகுத்த சுமையானது
அதில்
விலையுயர்ந்தக் கற்களை
பதித்து வைத்திருக்கிறீர்கள்....
நான்
மிகுந்த பசியுடன் இருக்கிறேன்...
என் கைகள் மட்டுமில்லை
நம்பிக்கையும் அழுக்காக இருக்கிறது...
நீங்கள் கொடுத்த மதுவைக்
குடித்துவிட்டு
நாயாக மாறிவிடுகிறேன்
நீங்கள்
என்னைத் தடவிக் கொடுக்கிறீர்கள்...
போதைத் தெளிந்ததும்
வனாந்தரத்தில் உலாவுகிறேன்...
என்னைச் சுற்றிலும்
மிருகத்தின் சப்தங்கள் உலாவுகின்றன...
போர்வை
கிழிசலாகவே இருக்கிறது
கிரீடம் விலையுயர்ந்தது...
பசித்த மிருகமொன்று
இரையை வேட்டையாடிக் கொண்டிருக்க
நான் மட்டும்
மிகுந்த பசியுடன் இருக்கிறேன்,
என் ராஜ்ஜியம்
சுருங்கிக் கிடக்கிறதா? - ஆனாலும்
கிரீடம் விலையுயர்ந்தது.
- மு.முகமது பாட்சா*
13 /02 /2019
No comments:
Post a Comment