
என்னதான் செய்தி என்று
என்னிடம் கேட்கிறீர்கள்...
உங்களிடம்தான்
செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன...
நீங்கள்
அமர்ந்திருக்கும் நாற்காலி
ஒரு மரத்தின் செய்தியைச் சொல்லும்...
புழுக்கம் வரும்போது
காற்றின் தேவையை
எந்தச் செய்தி சொல்கிறது?
மீன் சுவையானதுதான்
கடலைப் பற்றி
யாரும் சிந்திப்பதில்லை...
வாகனங்கள் சுகமானது
நோய்களை வாங்கிக்கொள்கிறோம்...
எரிவாயு என்பது
பூமிப்பந்தின் சுவாசக் காற்று...
மலைகளைப் பெயர்த்து
எலிப் பொந்துகளை அடைக்கிறது நாகரீகம்
பூமி அதிரும்போது
அச்சாணிகளைத் தேடி என்னப்பயன்?
நதிகளைத் தொலைக்கவிட்டு
நீருக்காக அலைவது யாருக்கான செய்தி?
உன் மீது விழும் மழைத்துளி
ஆயிரம் செய்திகளின் அச்சாரம்...
பனித்துளியை
ரசிக்கத் தெரியாதவன்
பூக்களைப் புகழ்வது போலியானது...
என்னதான் செய்தி என்று
என்னிடம் கேட்கிறீர்கள்...
உங்களிடம்தான்
செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன...
- மு.முகமது பாட்சா*
19 /02 /2019
No comments:
Post a Comment