
அந்தக் கவிதைக்குள்
என்னதான் இருக்கப் போகிறதென்று
அலட்சியமாகக் குதித்தான்
வண்ண மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன...
முதலையொன்று முதுகேற்றி
அவன் பயணத்தைச் சுவாரசியமாக்கியது...
கானகம் இடைமறிக்கக்
கடல் நகர்ந்து கொண்டது...
பறவைகளின் கூட்டை
தங்குவதற்கு ஒதுக்கிக் கொண்டான்...
அங்குதான் அவனுக்கு
இசை ஞானம் பிறந்தது...
விதையின் நுட்பங்களை
வேர்கள் சொல்லிக்கொடுத்தன...
விழாமல் இருப்பது எப்படியென்று
விழுதுகள் பாடம் நடத்தின...
காதலை கங்காருக்களிடம் கற்றான்...
வனம் ஆசிர்வதித்தனுப்ப
பாலை நிலம்
பரவசம் கொண்டு வரவேற்றது...
அமைதியென்பது அங்குதான் இருந்தது...
கள்ளிச்செடிகளின் கருணை விளங்கியது...
தண்ணீர் சேமிப்பென்பதை
ஒட்டகம் ஓதியது...
நிழல் தேவைதான் என்பதனை
அங்குதான் தெரிந்து கொண்டான்...
காற்று அவனைத் தூக்கி எறிந்தபோது ,
கவிதையின் கடைசிப் பக்கம்
அவன் கைகளில் இருந்தது.
- மு.முகமது பாட்சா*
08 /02 /2019
No comments:
Post a Comment