Saturday, 2 February 2019

சுலபமல்ல...



ஒரு கவிதையின் பின்னால் 
ஓடுவதென்பது அத்துணைச் சுலபமல்ல... 
மூளையின் நரம்புகள் 
இறுகிப்பிடித்துத் தளர்த்தும் அந்தத் தருணங்கள் 
அலாதியானவை... 
தேநீர் கோப்பை ஆறி 
ஆதங்கத்துடன் நம்மை ஏளனமாய்ப் பார்க்கும்.... 
வார்த்தைகளில் இடறிவிழுந்து 
எழுவதற்குள் மூச்சுத் திணறுமே 
அதுவும்கூட ஒரு முத்துக் குளியல்தான்.... 
இடம் மாறி 
இனம் மாறும் இரசவாதம் நிகழாத கவிதைகள் 
எப்போதும் இறந்தே கிடக்கும்... 
சொற்களை அடுக்கி வைத்துவிட்டு 
சுகம் தேடுவது 
காய்ந்த புண்ணைச் சொறிந்து கொள்வது போல்தான்... 
எனவேதான் 
ஒரு கவிதையின் பின்னால் 
ஓடுவதென்பது அத்துணைச் சுலபமல்ல...

- மு.முகமது பாட்சா*
03 /01 /2019

No comments:

Post a Comment

Popular Posts