
அந்தக் கவிதை
சற்றுமுன் என்னை விழுங்கியிருந்தது
சீரணிக்கப்படாமல்
அதன் வயிற்றில்
உருண்டு கொண்டிருக்கிறேன்...
வார்த்தைகளின் வீச்சம் தாங்காமல்
தேகம் வதங்குகிறது...
எழுத்துகளை இடம் மாற்றியும்
இலக்கணப் பிழை வெளியே துப்பவில்லை...
குவாண்டாநாமோ சிறைக் கைதிகள் போல்
அதன் வயிற்றில்
துயரங்களைக் கவிதையாக்குகிறேன்...
வயிற்று வலியால்
அந்தக் கவிதை இப்போது அழுகிறது...
சற்று நேரத்தில் வாந்தியெடுத்து
என்னை வெளியேற்றலாம்..
நான் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன்.
- மு.முகமது பாட்சா*
28/03/2019
No comments:
Post a Comment