
யதார்த்தக் கவிதைகள் - 1
@
விடியாத அந்தக் காலையில்
கட்டுமரத்தைக் கவிதைகள்
நகர்த்திக்கொண்டிருந்தன...
நுரைத்த அலைகளின் மேல் நகரும்
கட்டுமரம்
வார்த்தைகளின் சந்தங்களையும்
ஏற்றிக் கொள்கிறது...
வழிகாட்டி வெள்ளி புன்சிரிக்க
முகம் பூத்து நகர்கிறது கட்டுமரம்...
தண்ணீரின் வாசனை
எழுத்துகளை முகர்ந்து பார்த்து
மூச்சடக்கி ஏலேலோ பாடத்
துள்ளிவரும் எழுத்துகளையெல்லாம்
சேகரிக்கிறான் மீனவன்...
கொட்டி கிடக்கும் வார்த்தைகள்
நிச்சயம் விற்பனைக்கே...
பசித்த வயிறுகள்
தங்களின் இதயங்களை நிறுத்தி
கரையினில் காத்திருக்கும்.
- மு.முகமது பாட்சா*
05 /03 /2019
No comments:
Post a Comment