
சுவனத்தின் கதவுகளைச்
சிலர் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்..
ஆனாலும் நரகத்தின் வாசலில்
நறுமணம் வீசுகிறது...
அங்குதான் தோரணங்கள் கட்டி
கேளிக்கைகள் நடக்கின்றன...
மாயவழகிகள்
மகிழம்பூ தட்டுகளோடு நிற்கிறார்கள்...
கற்பனைகள்
கண்சிமிட்டிக் களிப்பூட்டுகின்றன ...
சுவனம் அத்துணை அழகில்லையென்று
ஆர்ப்பரிக்கிறார்கள்...
சுவனத்தின் தொலைவு
கரடுகளாய் நிறைந்திருக்கிறது...
கந்தலாடை மனிதர்கள்
கண்ணீரோடு செல்கிறார்கள்..
இங்கொன்றும் அத்துணைப் பகட்டில்லை
வாசல் குடிசையாக நிற்கிறது...
தஸ்பீகளின் சப்தம் சங்கீதம் இசைக்க...
முசல்லாக்கள்
அவர்களின் முன்னால் நடந்து செல்கின்றது...
வாசலென்பது போகும் வழி மட்டும்தான்
வீடு என்பதுதான் நிம்மதியின் சுவனம்.
சுவனத்தின் கதவுகளைச்
சிலர் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
05/04/2019
No comments:
Post a Comment