Thursday, 11 April 2019

இளைப்பாற மரம் தேவை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி மற்றும் உரை

ஒரு கவிதைக்கும் 
இன்னொரு கவிதைக்கும் இடையில் 
தாகத்துடன் 
அலைந்து கொண்டிருக்கிறேன்... 
அண்டைப் பந்திற்குள் அடங்கியிருக்கும் 
என் சிறகுகளுக்கான மொழியை 
இலைகள் 
காற்றினில் சேமித்து வைக்கின்றன... 
வேர்களோடு ஊர்வலம் போகும் போதுதான் 
மண்ணின் வாசத்தையே 
எழுத்துகளாக 
சேமித்தெடுக்க முடிகிறது... 
மழையைப் பற்றி எழுதும் முன் 
அதன் கருவறைக்குள் நுழைந்து 
குளிர்ந்த வார்த்தைகளைக் களவாட வேண்டும்... 
எரிகிற தீயில் 
எழுத்துகளைப் போட்டு விட்டுத்தான்... 
அரசியல் பற்றிய கவிதைகளை 
என்னால் எழுத முடிகிறது... 
கற்பனைப் பூங்காக்கள் இல்லையென்றால் 
காதல் கவிதைகள் 
சருகுகளாய் உதிர்ந்திருக்கும்... 
சூஃபிச வார்த்தைகளென்னை 
சூட்சம வனத்திற்குள் அழைக்க ... 
வெட்டப்பட்ட மரத்துண்டுகளில் 
போதி வனம் தேடிக் கொண்டிருக்கிறேன்... 
இந்தக் கவிதைக்கும் 
அடுத்தக் கவிதைக்கு மிடையில் 
இளைப்பாற 
எனக்கொரு மரம் அவசியம் தேவைப்படுகிறது. 

- மு.முகமது பாட்சா*
11/04/2019

No comments:

Post a Comment

Popular Posts