
ஒப்பனையுடன் கூடிய அந்தச் செய்தியை
எல்லோரும் பிடித்து
ஓடிக்கொண்டிருந்தார்கள்..
ஒப்பனையில்லாத செய்தியொன்று
தட்டேந்தி
பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது.
செய்திகள் தொலைக்காட்சிகளை
வாசித்துக் கொண்டிருந்தன.
அவ்வப்போது அச்செய்திகளுக்கு
வதந்திகளை ஒத்திக் கொண்டிருந்தார்கள்...
செய்திகள்
செய்திகளாகவே நகர்ந்துவிடும்
என்பதுதான் உண்மை.
ஆனாலும் சில செய்திகள்
ஆயுதக்கிடங்குகளில்
கங்குகளை மூட்டிக் கொண்டிருந்தன...
செய்திகள் மீதே
சிலர் செய்திகளைத் தடவிச்
சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்...
இங்கு உடைந்த நாற்காலிகள்
ஆடாமல் இருப்பதற்கும்
செய்திகளே முட்டுக் கொடுக்கப்படுகின்றன...
செய்திகளை
வீதிகளில் சிதறவிட்டுவிட்டு
ஒப்பனைகள் மட்டுமே தொலைக்காட்சிகளில்
அவ்வப்போது உடைந்து விழுகின்றன
- BREAKING NEWS -
- மு.முகமது பாட்சா*
23/04/2019
No comments:
Post a Comment