
படிமத்திற்குள் நுழைந்து விட்ட பறவையொன்று
வெளியில் வர இடம் தேடுகிறது...
நாற்புறமும் சுவர்கள் சூழ்ந்திருக்கின்றன...
கடலொன்று
கண்ணாடித் தம்பளரில் தளும்பிக் கொண்டிருக்க
மீன்கள் தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கின்றன...
காந்தியின் கண்ணாடி பார்வை இழந்து கிடக்க...
ஒழுக்கத்தின் குறியீடுகளாகக்
குரங்கின் படிமங்கள்...
கடவுள்களைப் படிமங்களாக்கி
கைகளில் ஆயுதம் தரித்துக் கொண்டவர்கள்
கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்க...
தேசம் வரைபடத்தின் படிமமாக மாறி
செழிப்பாக இருக்கிறது...
நாய்களின் படிமத்தோடு நாக்கை உலரவிட்டு
சிலர் வால்களை ஆட்டிக் கொண்டிருக்க...
மன்னனின் படிமத்தில்
சாத்தான் வேதம் போதித்துக் கொண்டிருக்கிறான்.
- மு. முகமது பாட்சா*
05 /07 /2019
No comments:
Post a Comment