
நமக்கிடையில்
மெல்லிய வெளிச்சம் போதுமாக இருக்கிறது...
சன்னலிடை சரசரக்கும் கோணி
எட்டி எட்டி பார்த்துவிட்டு அலைய...
அப்படி என்னதான் பேசிவிடப் போகிறோம்?
கீற்றின் மூங்கிலிடையோடும் எலிகள்
சரசம் பாய்கின்றன...
கிழிந்தப்பாயில் அழுந்திய முதுகில்
கோலம் போட்டு இரசிக்கிறாய்....
உடைந்த இதயத்தை ஒட்ட வைப்பது
உன் முத்தச்சூடு மட்டுமே...
அட்டையில் தொங்கும் அந்தகார சாமிகள்
காற்றில் திரும்பிக்கொள்கிறார்கள்...
ஒத்திக் கொள்கிறோம் வியர்வை வாசத்தை
பாவில் ஊடையோடி பரவசம் ஊசலாட...
நெய்திருக்கும் துணியொன்று
நேர்த்தியாய் விடியும் சில கிழிசல்களோடு...
இது போதும் நமக்குக் காதலே!
- மு. முகமது பாட்சா*
25/07/2019
No comments:
Post a Comment