
ஓநாய்கள் போன பாதைகளில்
ஆடுகளின் உதிரம் சிந்தி கிடக்கின்றது,
தொலைந்து போன ஆடுகளோடு
மேய்ப்பனின் வாழ்க்கை தேடியலைய
தப்பிச் சென்ற ஆடுகளின் சுவாசத்தை
புற்கள் மேய்கின்றன
மேய்ப்பனின் புல்லாங்குழல் சோகம்
மேய்ச்சல் காட்டினில் நுழைய
மீட்பரின் பாதை மட்டும் தொலைவில்
நீண்டு கொண்டே செல்கிறது
காட்டருவி கண்ணவிந்ததன் காரணம்
மேகமென்றுதான் குறை சொல்ல
மரங்களுக்கு இங்கு உயிரில்லை
மலை புற்கள் உரசிப் பற்றியெரிகின்றன
முலை வற்றிய தாயொருத்தி
குழந்தைக்கு பாலைத் தேடுகிறாள்...
காலின் கீழ் விலாசத்தை தேடச் சொல்லி
நாடோடி பாடகன் பாடிச் செல்கிறான்
நானென்ற முகவரி
ஆடுகளோடு ஆடாய் அலக்கழிகிறது
திரட்டிக் கோலின் வாசம்
எட்டிப் பார்க்கும் வரை
ஓநாய்களின்
கண்கள் ஆடுகளை மட்டுமே மேயும்.
- மு.முகமது பாட்சா*
11/05/2018
No comments:
Post a Comment