Saturday, 19 May 2018

இரவின் வானம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ரமலான் 3

இரவின் வானம் 
திக்ருகளை எண்ணிக் கொண்டிருக்கிறது

சஜ்தாவின் நெற்றித் தழும்புகள் 
இறைவனைச் சந்திக்க முயல்கின்றன

கருணைகளை அவரவர் 
கைகளில் வைத்துக் கொண்டு திரிகிறார்கள்

இருட்டிலிருந்துதான் வெளிச்சம் பிறக்கிறதோ 
இரவுக்கேன் இத்துணைப் பிரகாசம் !

இறைத்தூதர்களின் எண்ணிக்கை 
வானில் இரைந்து கிடப்பதாக 
சூஃபி பாடலொன்று சுற்றிக் கொண்டு போகிறது

வயிறு பசிக்கும் போது 
மனிதம் விழித்துக் கொள்ளும் மகோன்னதம்

முசல்லாக்களில் 
பாவத்தின் கண்ணீர் இரைந்து கிடக்கிறது

இரவு தியானத்திலமர்ந்து விட்டதோ

புறாக்களின் சிறகசைப்புடன்.... 
பஜ்ரின் பாங்கோசை பவ்வியமாக ஒலிக்கிறது

ஒலுவின் ஓசைகளைக் கேட்டீர்களா 
தூக்கத்தைவிட 
தொழுகையே மேலென்று தளும்புகின்றன.

- மு.முகமது பாட்சா*
19/05/2018

No comments:

Post a Comment

Popular Posts