
ரமலான் 5
சிறகுகளில்லாமல் யாரால் பறக்கமுடியும்
முயற்சிகளை முன் வைக்காமல்
வானத்தையளப்பது முட்டாள்தனம்...
பறவைகளுக்கும்
பாதுகாக்கத் தெரிகிறது தன் குஞ்சுகளை
வானத்தயசைக்கும் மின்னல்
ஏன் உடனே இறந்து போகவேண்டும்?
காற்றிடம் நீ கற்றுக் கொண்டதென்ன?
வேர்கள் பயணப்படாவிட்டால்
மரங்களெப்படி உயிர் வாழ முடியும்?
விதைகளுக்குள் உட்கார்ந்திருக்கும் உலகம்
பெரும் விருட்சமல்லவா!
கால்களைக் கட்டிக் கொண்டு கையேந்துபவன்
அப்படியேதான் இருக்கிறான்
பூமிப்பந்து தன் நகர்வை நிறுத்துவதில்லை
தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும்
கேட்டால்தான் எதுவுமே இங்குக் கிடைக்கும்
பூனைக் கண்களை மூடிக் கொண்டாலும்
சிந்தனை எலிகளின் அசைவைக் கண்காணிக்கும்
கட்டிப்போடாத ஒட்டகம்
எப்போதுமே நம் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை
பிஸ்மில்லாவில் தொடங்காமல்
இன்ஷா அல்லாஹ்விற்குள் ஒளிந்து கொள்கிறோம்
முயற்சியென்பதும்
முசல்லாவில் நிற்கும் முதல் தொழுகைதான்
- மு.முகமது பாட்சா*
21/05/2018
No comments:
Post a Comment