Wednesday, 9 May 2018

கவிதைகளின் கூட்டம்

வண்ண வண்ணப் பட்டங்கள் 
காற்றில் பறக்கின்றன! 
அவரவர் எண்ணம் போல் 
உயரம் எட்டிப் பிடிக்க.... 
வஞ்சத்தில் கருவறுக்க 
மாஞ்சாக்கள் 
நூலில் மறைந்திருக்கின்றன! 
அத்தனை பட்டங்களையும் 
அறுத்தெறிந்து 
ஒற்றைப் பட்டம் உயரே எழும்பும்! 
மற்றையப் பட்டங்கள் மீண்டும் வரும் 
ஒற்றைப் பட்டத்தை அறுத்தெறிய... 

அரசியலில் இதுவெல்லாம் 
சாதாரணமப்பா! 

- மு.முகமது பாட்சா*
09/05/2016

----------------

தீ யென்று எழுதிப் பார்த்தேன் 
எழுதிய தாள் எரியவில்லை! 
நீரென்று எழுதிப் பார்த்தேன் 
எழுத்துகளும் அழியவில்லை! 
சாதி யென்ற வார்த்தையில்  
உதிரத்தின் கறைகள் ஒட்டிக் கொண்டன !

- மு.முகமது பாட்சா*
09/05/2016

---------------------

அன்னையர் தினம் பற்றி 
அழகாய்க் கவிதை யெழுதிய 
கவிஞனின் அம்மா 
மகளிடம் புலம்புகிறாள் 
மகனைப் பற்றி! 

- மு.முகமது பாட்சா *
09/05/2016

------------------------
வீணன்...

விதியின் கைகளில்
விளக்கைக் கொடுத்துவிட்டு
வெளிச்சம் தேடுகின்றான்!

மதியை மயக்கத்தில் வைத்து
விடியவே யில்லையென்று
விளக்கம் சொல்கின்றான்!

முகவரியை காற்றில் எழுதிவிட்டு
விழுங்கியது காற்றென்று..-வீணாகப்
பழிச் சொல்கிறான்!

நடக்காமல் நின்றுவிட்டு
கால்கள் நகரவேயில்லை யென்று
நாசுக்காக பகர்கின்றான்!

தான் நேரத்தை வீணடித்து
சூம்பியதை மறந்து விட்டு
காலங்கள் போனதென்று...
கண்டபடி உளறுகின்றான்!

இப்படியே போனால் ஒரு நாள்
இவனா செத்தான்! என்பது போய்
இவன்தான் செத்தானென்றே
சுரணை யற்று போகும்......-இவன்
தாய் சுமந்த தேகம்!

- மு.முகமது பாட்சா*
09/05/2015

------------------------

தமிழ் வாழ்த்து

தமிழின் காதலால்...
கல்வியின் பொட்டழித்து
கலவியில்  திளைத்து
ல"எடுத்து ஓரம் வைத்து
ள"சேர்த்து- களவும் செய்து
பின் "ள"வை  வீசிவிட்டு...
தை"சேர்த்து கவிதையாக்கி
என் தமிழின் உறவிற்கே
க"விலக்கி விதைத் தருவேன்...
என் தாய் மொழி தமிழ்தான்
தனிதென்றே!
வாழிய நீ வாழியவே

- மு.முகமது பட்சா*
09/05/2015
______________________

No comments:

Post a Comment

Popular Posts