
மொழியாத மௌனத்தை
கட்டி பிடித்துக் கொண்ட நாம்
இரைந்து கிடக்கும்
இரவின் வில்லைகளைச் சேர்த்து
பகலொன்றை உருவாக்க முயல்கிறோம்
கனா மொழியில்
பதுங்கிக் கொண்ட சில்லறைகள்
உன்னிதழ் வனத்தின் வழியே
எட்டிப் பார்க்கின்றன
நம் பார்வைகளின் வெளிச்சம்
மெல்லத் துளிர்க்கிறது
குழைத்து வைத்த இரவு வழிந்து
சிறகுகளைப் பூசிக் கொள்ள
மூன்றாம் வனத்திற்குள்
இருவர் மட்டுமே பறக்கிறோம்
முப்பரிமாணங்களில் ஒரு கவிதை
நம்மைப் பின் தொடர
இரண்டாம் வனத்துப் போராளிகள்
எழுத்துகளைச் சிறை வைக்கிறார்கள்
முதலாம் வனத்தில் நம்
கபர் குழிகளின் மேல் முளைத்திருக்கும்
எதிளைப் பழங்கள் இப்போதும்
இனிப்பாகத்தான் இருக்கின்றன
காதல் சுவையானதுதானே !
- மு.முகமது பாட்சா*
10 /05 /2018
No comments:
Post a Comment