
அடையாளங்களை
அடையாளத்துடன் நாங்கள்
தேடிக் கொண்டிருக்கிறோம்
துறவியென்பதற்கும்
ஓராடை
நிச்சயம் தேவைப்படுகிறது
போதிமரத்தை
புத்தனின் அடையாளமாகவே
பார்க்க கற்றுக் கொண்டோம்
அடையாளங்களுக்கான முகமூடிகள்
சந்தைகளில்
ஏராளமாகக் கிடைக்கின்றன...
ஆதார்
அடையாளமாகவே இருந்தாலும்
அவன் இறந்த பிறகு
அதற்கு உயிர் இருப்பதில்லை
நல்லவனுக்கான அடையாளம்
வார்த்தைகளின் மீதும்
கெட்டவனுக்கான அடையாளம்
செயல்களிலும் மீதும் சேர்ந்து கொள்கிறது
மதங்களுக்கான அடையாளங்கள்
அன்பைத் தொலைத்துவிட்டு
ஆயுதங்களைச் சுமந்து திரிகின்றன
சாதிய அடையாளங்களில்
முடிவிலியாய்
ஒளிந்து கொண்டவர்கள் பரிதாபிகள்
இரவின் அடையாளம் இருட்டென்றும்
பகலின் அடையாளம்
வெளிச்சமென்றும் போதித்தவன்
நிச்சயம் போக்கத்தவன்
அடையாளமில்லாமல்
யாருமிங்கே நடந்து போவதில்லை
உலகைவிட்டு
கடந்து போவதுமில்லை
சுவடுகளென்பது
கடந்தகாலங்களின் பிரதிமை
நிகழ்காலமென்பதோ
மாயச் சொற்களின் காட்சி பிழை
காதல் மட்டுமே
இங்கு அடையாளமின்றி வாழ்கிறது
ஆகையினால்
காதல் செய்வீர் மானிடரே !
- மு.முகமது பாட்சா*
13/05/2018
No comments:
Post a Comment