Sunday, 6 May 2018

வராத வார்த்தைகள்

வராத வார்த்தைகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

என் எழுத்துகளில் எதையெடுத்து 
ஒளித்து வைத்திருக்கிறாய்? 
வார்த்தைகள் வராமல் தடுமாறுகின்றன

என் ரேகைகளின் 
நதியோட்டம் தடைப்பட்டிருக்கிறது 
வியர்வை மழையா 
வெப்பச் சலனத்தைப் போக்கிவிடும்?

சருகின் இலைகளில் எறும்புகள் 
எதை எதையோ எழுதுகின்றன 
உயிரெழுத்துகளைத்தான் 
அவை மேய்ந்ததாகச் சொல்கிறாய்

காற்றுச் சிறகில்லாமல் பறக்கிறது 
நாடோடியின் கால்கள் நடப்பதற்கு மட்டுமே 
பாதைகள் விரிகின்றன

இசையைப் பிரிப்பவன் விற்பன்னனாகிறான் 
இரசிப்பவன் மட்டுமே இங்கு யோகி...

பாடல்களின் வரிகளைத் திணித்து விடாதே 
இரசனைகள் இறந்துபோய் 
எத்துணையோ நாட்களாகிவிட்டன

உளிகளின் பொறுமை என்னிடமில்லை 
சுத்தியல்கள்தானே 
சிற்பங்களையே உருவாக்குகின்றன

சிறு கோடாரியொன்று செய்கிறேன் 
வார்த்தைகளுக்குள் வராத 
அந்த எழுத்துகளைச் செதுக்குவதற்காக....

முடியாத கவிதையில் முற்றுப்புள்ளி எதற்கு 
துளிர்கள் மெல்ல எட்டிப் பார்க்கட்டும்... 
எழுத்துகள் வேர்களினடியில் மூச்சுவிடுகின்றன.

-மு.முகமது பாட்சா* 
04/05/2018

No comments:

Post a Comment

Popular Posts