
ஊர்மிளையின்
அழுகையைச் சுமந்து திரியும்
அந்த வனத்திற்கு என்ன பெயர் வைப்பது?
பாண்டுவின் வர்ணனைகள்
அழுது கொண்டிருக்கும்
அந்த இடத்திற்குப் பெயர்தான் மாத்ரியா?
அம்பாலிகா
இன்றும் அலைந்து கொண்டிருக்கிறாள்....
யசோதரையின் மௌனம்
செத்துக் கிடக்கிறது மாட்டிறைச்சியாக...
உரித்தத் துயிலில்
ஒட்டிக் கொண்டிருந்தது
அத்துணைக் கண்களும்...
அகலிகை
கல்லாகவே இருக்க விரும்புகிறாள்
கௌதமனை யாராவது அடிக்கக்கூடும்
தன்னையெடுத்து...
- இரத்தங்களை அள்ளியெடுத்து
நிர்பயா என்று பெயர் சூட்டுகிறார்கள்...
அரிவாள்கள்
ஆண்களின் மீசையெனப் படிமம் மாறுகிறது.
- மு. முகமது பாட்சா*
29/06/2019
No comments:
Post a Comment