
ஓர் அசாத்திய சப்தக் குகையில்தான்
அந்த எலிகள் வாழ்கின்றன...
வளைந்த பாதைகளில்
பதுங்கு குழிகளும் அவசியமாகிறது...
எந்த நேரத்திலும் வேட்டை தொடங்கலாம்...
ஒரு பாதை
கண்ணாடிச் சில்லுகளால் அடைபட்டிருக்கிறது..
வாய் கிழிந்த எலிக்கு
ஈமக்கிரிகை நடத்த இது நேரமில்லை...
அடுத்த வழியில் ஓர் எலி
தன் குஞ்சுகளுடன் இறந்து கிடக்கிறது...
விஷம் வைத்திருக்கிறார்கள்....
பூனைகளின் சப்தம்
மண்டைக்குள் ஊடுருவி ஓடுகிறது...
பூனையின் பாதங்களாய்ப் புகை
உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன...
மூச்சுத் திணறிச் சாகும் போதும்
பயமிருந்தால் அச்சம் தின்றுவிடும்....
வேறு வழியில்லை
வேட்டைக்காரர்கள் நிற்கும் வாசல் வழி
பாய வேண்டியதுதான்...
மரணம் நிச்சயமென்றாலும்
காயம் செய்துவிட்டுச் சாவதிலும் ஒரு சுகம்தான்...
எலிகள்
வேட்டைக்காரர்கள் மீது பாயத் தொடங்கின.
- மு.முகமது பாட்சா*
20/06/2019
No comments:
Post a Comment