
உங்களுக்கென்று தனியாகப் பிரச்சனைகளை
வைத்துக் கொள்ளாதீர்கள்
அதைத் தீர்ப்பதற்காகத்தான்
ஆட்சியாளர்கள் நாங்களிருக்கிறோம்...
ஒரு ரொட்டித்துண்டுக்கே நீங்கள் அழும் போது
மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்போம்...
அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு
ஆங்கிலக் கல்வி மோசமென்போம்...
காந்திக்குச் சிலை வைத்துவிட்டு
உப்பிற்கு வரி போடுவோம்....
நியாய விலைக்கடைகளில் அரிசி தராமல்
இலவசமாய் எரிவாய்வு தருவோம்...
உங்கள் உடல்
கெட்டுவிடக்கூடாது என்பதற்காக
உணவுப் பொருட்களுக்கு அதிக பட்ச ஜி எஸ் டி
உங்களுக்கு மானம் இருப்பதைச் சோதிக்க
இந்தியைத் திணிப்போம்...
நீட் தேர்விற்குத் துப்பட்டாவைக் கழற்றுவோம்
பின்னர் அதையே போடச் சொல்வோம்
எங்களை அதிகபட்சம் நம்புங்கள்
இல்லையென்றால் விரைவில்
இராமருக்கும் கோவில் கட்டுவோம்....
உங்களுக்கென்று தனியாகப் பிரச்சனைகளை
வைத்துக் கொள்ளாதீர்கள்
அதைத் தீர்ப்பதற்காகத்தான்
ஆட்சியாளர்கள் நாங்களிருக்கிறோம்...
- மு.முகமது பாட்சா*
02/06/2019
No comments:
Post a Comment