
இருட்டு நேரம்
அந்தக் கவிதையை வெட்டிப்
புதைத்துவிட்டுக் கை கழுவுகிறேன்
ஒட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகள்
ஒவ்வொன்றாக உதிர்கின்றன...
உறக்கம் வராதவன் நடந்து போகிறான்
தூக்கம் கலையாத வார்த்தைகள்
ஆடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது...
மூடிக் கிடக்கும் தேநீர்க் கடை வாசலில்
சில வார்த்தைகளை
எறும்புகள் இழுத்துச் செல்கின்றன...
எழுத்துகள் ஒன்று கூடி வெளிச்சம் தேட
ஈசல்களென்று
ஒருவன் சொல்லிவிட்டுப் போகிறான்....
இன்னம் சற்று நேரத்தில் நடை திறந்து
பறவைகளின் சுப்ரபாதம் வழியும் ...
வார்த்தைகளை வெட்டிப் புதைத்தவன்
உறங்கப் போகிறேன்
வெளிச்சம் கண்களைக் கூசுகிறது.
- மு.முகமது பாட்சா*
11 /11 /2018
No comments:
Post a Comment