
சொல்லடைவில்
பிழையிருப்பதாகச் சொல்கிறாய்
பிழையில்லாத பிழைகள் - இங்கு
யார் கண்களுக்கும் தெரிவதில்லை
ஆசையைப் பிழையென்கிறோம்
காதலாய் மலரும்போது காமம் பிழையாமோ?
நாலாந்திரப் பிழைகள்
நாற்காலிகளில் அமர்ந்தபிறகுதான்
தேசத்தின் பிழைகள் தெளிவாகத் தெரிகிறது
சூட்சமப் பிழைகளைச் சரியெனக் காட்டும்
கண்ணாடி அணிந்து கொள்கிறோம்
மெய் பிழையெனச் சொல்லும் வேதாந்தம்
சொற் பிழையென்ற சொல்லாமோ?
நதிக்கரை நாகரீகம் உயர்வென்கிறோம்
நதிகளைச் சாகடித்துவிட்டு
பசுமை வழியென்பதும்
இயற்கையை அழித்துதானென்றால்
பெயரே பிழையன்றோ?
பிச்சையெடுத்துப் பிச்சை போடுகிற தேசமிது
பிழைகளைப் பற்றிப் பேசுபவன் தேசத்துரோகி
மூன்று குரங்களை
உதாரணம் கொண்டுவிட்டோம்
கண் மூடி வாய் பொத்தி
காதுகளை அடைத்துக் கொள்வோம்
பிழையில்லாத பிழைகள் - இங்கு
யார் கண்களுக்கும் தெரியப் போவதில்லை.
- மு.முகமது பாட்சா*
19 /06 /2018
No comments:
Post a Comment