Friday, 1 June 2018

வழித்தவறிய ஒட்டகம்

ரமலான் 17 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம், இயற்கை மற்றும் வெளிப்புறம்

பயணியைத் தவறவிட்ட ஒட்டகம் 
பாதைகளில் அலைகிறது 
பயணி 
பாதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறான். 
மணற்புயலில் 
மடங்கி உட்கார்ந்து கொள்வதைத் தவிர 
வேறு வழியில்லை 
கானலின் நீரென்பது  
காய்ச்சல்காட்டும் மாயை 
நம்பிக்கைதான் கால்களை நகர்த்துகிறது 
கள்ளியில் பூத்திருக்கும் கருணை 
ஒட்டகத்தின் உணவாகிப்போகும் 
ஈச்சையின் 
காய்ந்த மட்டைக்கூட நிழல்தரும் 
தொலைத்ததைத் தேடித்தானாக வேண்டும் 
மணலுக்கு 
மழையும் வெயிலும் ஒன்றுதான் 
அஃது எதையும் தங்க வைத்துக் கொள்ளாது 
நிழல்தான் நேரத்தை அறிவிக்கிறது 
மணலே நீராகிப்போக ஒலுவில் 
தொழுகை இருவருக்கும் கூடிப் போகலாம் 
நம்பிக்கையென்பது 
பூட்டினளவு இருந்தாலும் கூடப் போதும். 
மனசுக்குள் கதறும் புலம்பல் 
இறைவனுக்கு மட்டுமே கேட்கும் மொழி 
பயணி பாதைகளைத் தேடுகிறான் 
ஒட்டகமோ 
பயணியைத் தேடிக்கொண்டிருக்கிறது. 

- மு.முகமது பாட்சா* 
02 /06 /2018 

No comments:

Post a Comment

Popular Posts