
அவன் சிலையாக நின்று கொண்டிருந்தான்
அவன் எத்துணை நூற்றாண்டு மனிதனென்று குறிப்பில்லை
அவன் கழுத்தை சுற்றி சில மாலைகள் சுற்றியிருந்தன
அவன் யாரென்ற கேள்வியும் ஒரு நூற்றாண்டு சந்தேகம்
அவன் அருகில் ஓர் உண்டியல் முளைத்திருந்தது
அவன் அத்துணைச் சந்தோஷமாக இருக்கவில்லை
அவன் நிச்சயம் செதுக்கப் பட்டவனில்லை
அவன் விரட்டப்பட்டவனாக இருக்கலாம்
அவன் கால் நரம்புகள் புடைத்திருந்தன
அவன் உடலில் இப்போது இரத்தம் பாயவில்லை
அவன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறார்கள்
அவன் அரசனின் அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம்
அவன் உடல் முழுவதும் காயங்கள் பாவியிருந்தன
அவன் அநாதியென்று எங்கும் குறிப்புகளில்லை
அவன் நிச்சயம் உறைந்து போனவன்
அவன் தெய்வமென்று சிலர் கும்பிடுகிறார்கள்
அவன் சாத்தனென்று அரசு முத்திரையிட்டிருக்கிறது
அவன் நிச்சயம் இதற்கெல்லாம் சிரிக்க மாட்டான்
அவன் நிற்பது அவன் நிலமாக இருக்க வாய்ப்பில்லை
அவன் அகற்றமுடியாத சிலையென்கிறார்கள்
அவன் முகம் அச்சு அசல் நமது முகம்தான்
அவன் வேற்றுக்கிரக மனிதனுமில்லை
அவன் இப்போதும் அவனாகவே அங்கு நிற்கிறான்
அவன் இப்போது எல்லோருக்கும் ஒரு வேடிக்கை
அவன் யாரென்ற கேள்வியும் ஒரு நூற்றாண்டு சந்தேகம்
அவன் நம்மில் யாராவது ஒருவராகவும் இருக்கலாம்.
அவன் இன்னமும் சிலையாகவே நின்று கொண்டிருந்தான்
- மு.முகமது பாட்சா*
23 /06 /2018
No comments:
Post a Comment