
சம்பந்தம் இல்லாமல்
ஏதாவதொன்று நிகழ்ந்து விடுகிறது
எலிமருந்து சாப்பிட்டவனருகில்
எலியொன்று எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறது
திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிடுகிறேன்
ரூபாயின் மதிப்புக் குறைந்துவிட்டது
பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது
சேகர் ரெட்டியின் குற்ற வழக்குகள் தள்ளுபடியாயின
மரங்களைப் பற்றி எழுதிய கவிதைகளுக்கும்
எட்டுவழிச் சாலைக்கும் சம்பந்தமில்லை
தூங்கிக் கொண்டிருந்த போதுதான்
ரூபாய் நோட்டுகள் மதிப்பையிழந்தன
சுவீஸ் வங்கி முதலீடுகளும்
கேளிக்கைகளில் இருந்தபோது நிகழ்ந்திருக்கலாம்
அப்படித்தான் காந்தியை சுட்டபோதும்
சிலர் பட்டாசுவெடித்துக் கொண்டாடினார்கள்.
மன்கீபாத்திற்கு நேரமாகிவிட்டது
எங்கு எது நடக்குமென்று பயமாகவிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
29 /06 /2018
No comments:
Post a Comment