நுண்புனை கதைகள் 3

குப்பைத்தொட்டி
அஃது அங்கேயேதான் இருந்தது
சிலர் மூக்கை மூடிக்கொண்டு போனார்கள்
சிலர் முகம் சுளித்து எச்சிலை துப்பிவிட்டுப் போனார்கள்
அதன் வயிறு அவ்வப்போது புடைத்துக் கொள்ளும்
நகராட்சி வண்டிகள் அள்ளிச் செல்லவில்லையென்றால்
வாய்வழியே துர்நாற்றம் வழியும்
சற்றுமுன் வீட்டுக் கழிவுகளை ஒருவன் வீசிவிட்டுப் போனான்
அதில் கிடந்த எச்சில் சாப்பாட்டால்
நாயொன்று நன்றிக் கடனுடன் நகர்ந்தது
கர்ப்பமாக இருந்த எலியொன்றுக்கும்
பஞ்சணை இதுவாகத்தானிருந்தது
நடு நிசியில் வந்து விழும் காண்டத்திற்கெல்லாம் ஒவ்வொரு கதையிருக்கும்!
பசி தீர்ந்த பச்ச வவுத்துக்காரி பதுங்கிப் பதுங்கி வந்து
பொதியொன்றை போட்டுவிட்டுப் பிளசரில் விரைகிறாள்
வீலென்றழும் பூவொன்றின் குரலுக்கு நாய் வந்து காவல் நிக்கிறது
எலியொன்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது
குப்பைத் தொட்டிக்கு இப்போது வயிறு வலித்தது
அள்ளிக் கொண்ட அன்னக்கூடைக்காரி வயிற்றைத் தடவிக் கொண்டாள்
காலியாக இருந்தாலும்
வயிறு நிறைந்திருந்தது இருவருக்கும்.
- மு.முகமது பாட்சா*
24 /06 /2018
No comments:
Post a Comment