
தருணங்களின்
ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு நகர்கிறேன்,
என்னைச் சுற்றிலும்
சில நிகழ்வுகள் உட்கார்ந்திருக்கின்றன,
மற்றொரு முனையைப் பிரமைகள் பிடித்திருப்பதாக
பிரக்ஞை சொல்கிறது.
நிழல்களின் பிரதிகளை
ஒருவன் விற்பனை செய்து கொண்டிருக்கிறான்.
கழைக் கூத்தாடியின் கால்களின் கீழ்
உலகம் சுழல்கிறது
பசி உயிரையும் பணையம் வைக்கும்,
வார்த்தைகளைப் பறி கொடுத்து விட்டு
மௌனம் போர்த்திக் கொள்கிறேன்...
கவிதைகளை விற்றுக் கொண்டிருப்பவன்
கற்பனைகளைக் களவாடிச் செல்கிறான்,
தொடர்பில்லாத வார்த்தைகளாக
நானென்பது தனியாகவே அலைகிறது...
நெருஞ்சிக் காட்டின் நிழல்
முட்கள் இல்லாமல் இருப்பது ஏன்?
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment